Skip to main content

அது ஒரு கனாக்காலம்

"ஹையா இன்னைக்கு கடைசிப் பரிச்சை" என்று அன்று சந்தோசமாக பள்ளிக்கு புறப்படுவேன். நானும் என் நண்பன் ராசேந்திரனும் இட்டேரி வழியாக சைக்கிளில் எதிர்"காத்தில்" பெடல்கள் மீது ஏறி..அழுத்தி ... ஓட்டுவோம். எதிர் காற்றில் சைக்கிள் ஓட்டுவது என்பது பிரேக் பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதற்கு சமம். சோழக்கூட்டோடு எருமைத்தயிரு கலந்து ஆத்தா அன்போடு ஊத்திக்கொடுத்த சாப்பாடு , சைக்கிளின் ஆட்டத்தால், தூக்குப்போசி வாய்வழியாக.. சிந்த ஆரம்பிக்கும்.

சில சமயங்களில் பக்கத்து ஊரு வாத்தியார் எதுக்கால சைக்கிள்ல வருவார். உடனே இறங்கி ஒரு வணக்கம் போட்டு ... அப்படியே... தாவிக்குதித்து... மறுபடியும் அழுத்துவோம்.. சைக்கிளை நிப்பாட்டாமலே!
பரீட்சை முடிந்து மதியம் பள்ளிக்கு பக்கத்துல இருக்குற வயல்வெளிக்கு நண்பர்களோடு செல்வேன். அவரவர் சாப்பாடுகள் காலியானவுடன் கிணற்றில் ஒரு சிறு குளியல். ஒரு அரைமணிநேரம் தண்ணிக்குள்ள தொட்டுவிளயாடுவோம். சில சூரன்கள் இருப்பனுக... நல்லா மூச்சை தம் கட்டிக்கிட்டு .. ஒரு மூணு ஆள் ஆழத்துல போயி மல்லாக்க பாத்தவாரே படுத்துக்கிட்டு "முடிஞ்சா தொடுன்னு" சவால் விடுவானுக. நாங்க அவ்வளவு தூரம் தாக்குபுடிக்க முடியாதா... அதுனால "மகனே நீ எப்படியும் மேலவந்துதேன ஆகனும்னு" மேலேயே கழுகு மாதிரி வட்டம் போட்டு புடிப்போம். அந்த அரமணிநேரத்துலயே கண்ணு எல்லாம்.. சிவப்பா.. மப்பு அடிச்சமாதிரி ஆயிரும். உலகமே ஏதோ மிஸ்ட் எஃபெக்ட் பில்டர் போட்டு பாத்தமாதிரி புகையா தெரியும்.

அதுக்கப்புறம் பக்கத்துல இருக்குற சண்முகா தியேட்டர் போவோம். அங்க சகலகலாவல்லவன் படம்னு ஞாபகம். அதுல 50 பைசா தரைடிக்கட் வாங்கி படம் பார்ப்போம். படம் முடிஞ்சதும் மீண்டும் சைக்கிள் பயணம். வர்ரவழியில அங்கங்க சைக்கில நிப்பாட்டி, வேலிக்கு ஓடுவோம். அப்படி ஓடினா ஒன்னு செவப்பா கோவப்பழம்.. அல்லது இலந்தப்பழமரம்.. கண்ணுல தட்டுப்பட்டிருக்கும். அதைப்புடிங்கி சாப்பிட்டுவிட்டு நேரா தோட்டத்து சாலைக்குப்போய் நிப்பாட்டுவேன்.

ஸ்டேண்டு போட்டு முடிக்கும் முன்பே நாலுகால் பாய்ச்சலில் ஓடிவருவான் "மணி". எங்க வெள்ளைநாய். டவுனுல ஜிம்மி டாமின்னு பேர் வக்கிற மாதிரி எங்க கிராமங்களில் மணி, வெள்ளையன், செவலையன் போன்ற பெயர்களே நாய்களுக்கு பிரசித்தமானவை. அது என்னைபார்த்த சந்தோசத்துல தொத்துக்கால் போட்டு ... மூஞ்சிய நாக்கால் நக்கி ... மனுசங்கள விட நண்பர்களை வரவேற்பதில் தாங்கள் தான் இணையற்றவர்கள் என்று நீரூபிக்கும்.
பின், "ஆத்தா வந்துட்டேன்" என்று கத்தியவாறே சாலையின் உள்ளே நுழைந்தால் ஆத்தா "பேரன் வருவானே" என்று கடலையை அல்லது நரிப்பயிறை வறுத்துக்கொண்டு இருக்கும். அதோடு கொஞ்சம் வெள்ளம் சேர்த்து சாப்பிட்டுவிட்டு ஒரு சொம்புத்தண்ணி குடிச்சுட்டு ஸ்கூல் யூனிபார்மில் சட்டைக்கு மட்டும் விடை கொடுப்பேன்.

டவுசர அண்ணாக்கயித்துல சுத்திக்கிட்டு வெறும் மேலோட பக்கத்து தோட்டத்து பழனிசாமி சாலைக்கு போவேன். அவன் நான் வர்ரதைப்பாத்ததும் உள்ள ஓடிப்போய் அவங்க வீட்டுல இருக்கும் ஹோவர்ட் ரேடியோவை திண்ணைக்கு கொண்டுவருவான். அதுல 6 பாட்டரிக்கட்டை போடுவோம். உடனே பாட ஆரம்பிக்கும். அது இளையபாரதம்னு ஒரு புரோகிராம் நு ஞாபகம். அதைக்கேப்போம். அப்போ டீவீ ன்னா என்னன்னு தெரியாத காலம். ஆப்புறம் பேண்டு மாத்துன்னு போராடி இலங்கை ஒலிபரப்புக்கு மாத்துவோம். அவர்களது பேச்சும் விளம்பரங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். பின் ஊர்க்கதைகள் பேசுவோம். அதில் பல சிறுமிகள், பேய்கள், ஊருக்கு புதுசா வந்திருக்கிற டிராக்டர் மகாத்மியங்கள் என்று பலசும் அலசப்படும்.

மறுபடியும் சாலைக்கு வரும்பொழுது மணி 9 ஆகியிருக்கும். கம்பஞ்சோறு கூட பண்ணைக்கீரை கடைந்து ஆத்தா பரிமாறியதை சாப்பிட்டுவிட்டு பட்டிக்கு காவலுக்கு போவோம். 3 செல் டார்ச்லைட் அப்புறம் ஒரு வீச்சரிவாள் மற்றும் ஒரு சிறுமூங்கில் தடி போன்றவற்றை எடுத்துக்கொண்டு மணி நாயோடு ஆடுகள் அடைத்துவைக்கப்பட்டுருக்கும் ஆட்டுபட்டிக்கும் தூங்கச் செல்வேன். அன்றைய கனவில் சில்க்ஸ்மிதாவும் கமலும் "நேத்து ராத்திரி எம்மா" பாடிக்கொண்டிருந்தார்கள்!

Comments

Popular posts from this blog

சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள்

#‎ மாற்றுச்சிந்தனை‬ : ஒரு போட்டி என்றால் அதில் நேர்மை இருக்கவேண்டும். சைக்கிள் ரேஸ்ல டிவிஎஸ் 50 யையும் ஸ்கூட்டரையும் ஓடவச்சுட்டு .. அதையும் அவர்கள் குறுக்குவழியில் ஓட்ட ... கேப்டனையும், வைகோவையும் மருத்துவர் அன்புமணியையும், திருமாவளவனாரையும் , பாஜகவினரையும், தம்பி சீமானையும் ரிசல்ட் பார்த்துவிட்டு கலாய்ப்பது அறிவீனம் மட்டுமல்ல சிந்தனை சீர்கேடும் ஆகும். உங்க பையன் பிட் அடிச்சு பாசானதுக்காக பக்கத்து வீட்டுப்பையன் நேர்மையா பரிட்சை எழுதி பெயிலானதை கிண்டல் செய்வது என்ன நியாயம். க ாசுகொடுக்காமல் தேர்தலை சந்தித்த ஒவ்வொரு தோல்வியாளர்களும் வெற்றியாளர்களே. நேர்மையாளர்களே. அவர்களின் தோல்வியை கிண்டல் செய்யும் அனைவரும் மக்களாட்சியின் அடிப்படை அறியா ஈனப்பிறவிகளே. நேர்மையற்ற வெற்றிகளை கொண்டாடி நேர்மையான தோல்விகளை கிண்டலடிக்கும் மனோபாவம் இருக்கும் வரை தமிழனை வீழ்த்த ராஜபக்‌ஷேக்கள் வேறு தனியாக தேவையில்லை. கருணாக்களே கூட போதும் ! தோல்வியடைந்த இவர்களுக்கெல்லாம் ஓட்டளித்த சுயமரியாதை இழக்காத வாக்காளர்கள் அனைவருமே வருங்கால நேர்மையான தமிழகத்தின் சிற்பிகள். கழிசடைகளல்ல அவர்கள். அவர்கள் அனைவர

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி

சின்னைய்யாவுக்கு வணக்கம் . . . அந்த முழுப்பக்க விளம்பரங்கள், மேடை அமைப்புகள், லைட்டிங்... டிஜிட்டல் குறும்படங்கள் எல்லாமே கேப்டனை சி கிளாஸ் ரேஞ்சுக்கும் உங்களை ஏ க்ளாஸ் ரேஞ்சுக்கும் காண்பித்தன என்றால் மிகையில்லை. (ஸ்டாலின் அவர்களின் மெகா புரோகிராம் தான் எப்படி சவால் விடும் என்று பார்க்கனும்) .அதுவும் அந்த அரங்கில் பாதியை பலருக்கும் சீட் போட்டு மீதம் உள்ள பிரமாண்டமான பாதியில் சுரே மைக் போட்டு ஒரு மேற்கத்திய கிருத்துவ பிரச்சாரகர் மாதிரி ஒரு ஸ்டைலில் கையை விரித்து குவித்து நடந்துகொண்டே ... தெளிவாக “ உங்கள் சின்னையாவாகிய நான்”... சாரி... உங்க மக்கள் பேச்சை கேட்டு கேட்டு அப்படி தோணிச்சு... “அன்பு மணியாகிய நான்” என்று முழுப் பொறுப்பேற்று கார்ப்பரேட் லீடர்ஷிப் ஸ்டைலில் ஆரம்பித்ததும் அட்டகாசம் தான் ! தமிழகத்தின் முதல் கையெழுத்தையும் போட்டுவிட்டீர்கள். சரக்கும் முடிந்தது. அல்ரெடி 2 லட்சம் கோடி பற்றாக்குறையை அம்மையார் உங்களுக்கு விட்டுச்செல்லவேண்டிய சூழல் !! அதற்கும் வட்டி வேறு இருக்கு என்று சொன்னீர்கள்.. அதற்கப்புறம் இலவச கல்வி முதல் பல்வேறு அருமையான நலத்திட்டங்களை உண்மைய

சூனா சாமியும் ஜே.என்.யூ வும் . . .

ஜே.என்.யூ மீது யார் கைவைத்தாலும் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உங்கள் மடத்தனம் வெளிப்படுத்தப்படும். அப்படியென்ன பெருமை அந்த பல்கலை கழகத்துக்கு? அவர்களின் இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் அலசுபவர்கள்.. இளைஞர்கள்... மூடர் கூடம் அல்ல . . . சிந்தனைகளின் சிகரங்கள் வாழ்ந்த வாழும் இடம்.  கன்ஹைய குமாரை கைது செய்த உடன் நடந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்து ஜான்சி ராணி போன்று போராடும் வீரப்பெண் என்று பலராலும் அழைக்கப்படும் செஹ்லா ரஷீத் என்னும் பெண்மணி/மாணவியின் பேச்சை மொழி புரியாவிட்டாலும் கேட்டுப்பாருங்கள் புரியும். அவரை ஒரு முறை ஆர்னாப் கேள்விகேட்டபோது சொன்னார்... நாங்கள் இடது சாரிகள் என்று விமர்சிக்கும் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி... நாங்களேதான்.. டாட்டா நானோவுக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கம் நந்திகிராமத்தை தாரை வார்த்தபோது போராட்டத்தை துவக்கியவர்கள். சுதந்திர சிந்தனை பற்றீ யாரும் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு நாங்கள் பண்பட்டவர்கள். ராம் தேவுக்கு எதிராக போராடினோம்... ஆனால் அவருக்கே கடிதம் எழுதினோம்... ஏன் அந்த கூட்ட்டத்தில் அவர் கலந்துகொள்ளக்கூடாது எ